Monday, August 17, 2020

கிருஷ்ண ஜெயந்தி கலாட்டா

எல்லாரும் கிருஷ்ணா ஜெயந்தி இந்த ஆண்டு 2020 நன்றாக கொண்டாடினீர்களா? 

ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு பல நினைவுகளை ஞாபகப்படுத்தும். 
அதில் எனக்கு கிருஷ்ணா ஜெயந்தியும் ஒன்று. 


காலையிலேயே அம்மாமார்கள் எழுந்து, சமையலை முடித்து விடுவார்கள். ஏன்னென்றால் கிருஷ்ணருக்கு பட்சணம் செய்ய வேண்டுமே ! திரட்டி பால், லட்டு, முறுக்கு, தேன்குழல், தட்டை , வெல்ல சீடை, உப்பு சீடை. பிறகு மற்ற பலகாரங்கள் . இதில் எல்லா அம்மாக்களுக்கும் சவாலாக இருப்பது சீடை, அதிலும் உப்பு சீடை. இதற்காக ஒரு அவசர கூட்டம் நடக்கும். சீடை பண்ணும்போது மட்டும் கொஞ்சம் நான் கூப்படறேன் வந்துட்டு போங்கோ... மதியம் 2 மணி அளவில் காலணி அம்மக்கள் இடையே நெறைய நடமாட்டங்கள் இருக்கும்... அவங்க எங்க வீட்டுக்கு வரதும், எங்க அம்மா அவங்க வீட்டுக்கு போறதுமாக.... சீடை பண்ணும் நேரம் அது.  
குழந்தைகள் நாங்க எல்லாம் 3 மணியளவில் எங்கள் டிரஸ், சிகை அலங்காரம் எல்லாம் ரெடியாக எடுத்து வைத்து கொள்வோம். கிருஷ்ணர், ராதை, என்று வேடம் அணிந்து கொள்ள. 4 மணியிலேர்ந்து வாசலில் இழை கோலம் போட ஆரம்பித்து விடுவார்கள் அக்காக்கள்... கிருஷ்ணர் கால் போடும் போது அது காய்கிறவரை யாரும் நடக்க கூடாது என்று நிபந்தனை. அடுத்து நாங்கள் எல்லாரும் அலங்காரம் பண்ணி ரெடியாவோம் பூஜைக்கு. 

காலனியில் ஒரு வீட்டில் இருக்கும் கிருஷ்ணர் விக்கிரகம் துளசி யின் கீழ் வைத்து பொதுவாக, பூஜை ஆரம்பமாகும். அங்கேயே பிரசம் நெய்வேத்தியம் என்று சொன்னால் எல்லார் வீட்டில் இருந்தும் பட்சங்கள் எடுத்து வந்து பல ஆகரங்களாக அவருக்கு நெய்வேத்தியம் நடக்கும். 

பஜனை, கிருஷ்ணர் பாடல்கள் என்று வெகு ரம்யமாக போகும்.... ஆடல் பாடல் நாங்கள் செய்வோம். அதில் கட்டாயமாக இடம் பெரும் பாடல்கள் சில.... மாடு மேய்க்கும் கண்ணா,  அலை பாயுதே கண்ணா,  புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,  கண்ணா நீ பேகமாய் வாராய் இறுதியாக இடம் பெரும் பாடல் " குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ".... எங்களோட ஆடல் முடிந்தவுடன் எங்கள் கண்கள் எல்லாம் எல்லார் வீட்டு ப்ரசாதங்களிலேயே இருக்கும். அதற்காகவே, எங்களையும் பஜனை பாடல்களை கத்தி பாட சொல்லுவார் விச்சு அப்பா. அவர்தான் அங்கே ஆஸ்தான வாத்தியார். எல்லார் கையிலும் ஸ்வீட்ஸ் கொடுத்து " க்ருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லி வாயில் போட்டுக்க சொல்லுவார். அப்ப்பா ஒரு வழியாக பூஜை முடித்தது என்று நாங்கள் எல்லாரும் அப்படியே அமர்ந்து கொள்வோம். 

இலையில் அழகாக பாயசம், அப்பம், வடை, சுண்டல் , புளியோதரை, வெண்ணை போட்ட தயிர் சாதம், என்று பரிமாற நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே சாப்பிட்டு, சில குழந்தைகள் அலங்காரம் கலைக்காமலே  உறங்கி விடுவோம். இந்த உப்பு சீடை சம்பாஷணை ஒரு வாரம் எங்கள் அம்மக்கள் இடையே தொடரும். 

இப்படியாக போகும் நான் பார்த்த சிறு வயது கிருஷ்ணா ஜெயந்தி. 
இன்றும் நான் அதை அசைபோட்டவண்ணம் ஓவ்வொரு ஸ்னாக்ஸ் அண்ட் சுவீட்ஸ் செய்தேன். இதே மாதிரி பண்டிகைகள் செய்வது நம் பாரம்பரியம் என்றாலும் அது ஒரு சந்தோஷத்தை, உற்சாகத்தை நம்முள் உண்டாக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. 

 A Break from our routine.

No comments:

Post a Comment